Thursday, 28 July 2016

பெருஞ்சுழி 41

சகந்தர்  விவாதங்கள்  முடிந்து இறுதியாக  எழுந்தார்.அவை அவர் கூற்றினைக் கேட்க முற்றமைதி  கொண்டு நிலைகொண்டது.

"சுனத சாசனம் மண் நிகழ்ந்த ஒரு பேரற்புதம் என அவையோர் பலர் உரைத்தனர். அத்தகைய  வார்த்தைகளை நான் பயன்படுத்துவதில்லையெனினும் அவர்கள்  கூற்றினை  நான்  மறுக்கவுமில்லை. ஈராயிரம்  ஆண்டுகள்  கடந்த மிகத் தொன்மையான நூல்  சுனத சாசனம். தன் உடல் வழியே நிலங்களை  அறிந்ந சுனதனின்  தெளிந்த சொற்களை கூழாங்கற்கள் மத்தியில்  வைரமென என் அகம் கண்டுகொள்கிறது. சுனத  சாசனம்  முழுவதுமாக சுனதனால் இயற்றப்படவில்லை. ஆதிரையும்  சுனத சாசனத்தை  முழுமை கொள்ளச் செய்யவில்லை. அதிகபட்சம்  எழுநூறு  ஆண்டுகளுக்கு  முன்னர்  தான்  சுனத சாசனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்  நாடுகள்  உருவாகி வந்தன. எனவே சுனத சாசனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்  நூற்றியிருபது  தேசங்களும்  உருவான பின்னரே அப்பெயர்கள் சுனத சாசனத்தில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். எங்கள்  பேராசான்  சுனதரின் நோக்கம் அரசமைப்பதோ ஆட்சி செய்வதாகவோ இருக்கவில்லை  என்பதற்கு  அவர் ஆழிமாநாட்டினை உடலை உயிரெனப் பிண்ணி ஆய்ந்த நிலவியல் ஆய்வுகளே சான்று. நிமங்க மரபு சுனதரின் நில ஆய்வுகளை முழுமையாக தொகுத்துள்ளது" என முடித்தார்.

ஆதிரை  புகிந்தத்தின்  அரண்மனைக்கு வருகை புரிந்தாள். சுனதபாங்கத்தின்  எல்லையில்  இருந்த சிற்றூர்களில் நடந்த பூசல்களில் சவில்யத்தின்  வீரர்கள்  சிலர் கொல்லப்பட்டனர்  என செய்தி வந்தது. மோதமதியின்  புதல்வர்களை  விடுவிக்கவும் அன்றைய தினம்  உத்தரவு  பிறப்பித்தாள்.

சுனதபாங்கத்தின் எல்லைக்குள்  கணபாரரின்  புரவிப்படை நுழைந்த  போது  சுனதபாங்கத்தின்  படைத்தளபதி  காமிலர் அவரை எதிர் கொண்டு  வரவேற்றார். நான்கு  அணித்தேர்களில் சிறந்த  வீரர்கள்  தேரோட்டிகளாகவிருக்க மாரதிரனின்  புதல்வர்கள்  கம்பீரமாக  வந்தனர். அதிலிருக்கும்  நகையாடலை உணராது  அவர்களுள்  தெரிந்த  கம்பீரம்  காமிலரை கோபமுறச்  செய்தது.  பொதுவாக இளவரசிகளையும் முதிய  அமைச்சர்களையும் பாதுகாக்கவே சிறந்த  வீரர்களை தேரோட்டிகளாக்குவது வழக்கம்.  தொலைவில்  இரு குதிரைகள்  பூட்டிய  தேர் சகடங்களை காமிலர் கேட்டார். சரளை கற்கள் நெறிபடும் ஒலியுடன் விரைந்து வரும்  அத்தேர் வன்தோளனுடையது என ஊகிக்க அவருக்கு  நேரமெடுக்கவில்லை. இரு தேச வீரர்களும்  அதனை உணரத் தொடங்கி விட்டனர். ஒவ்வொரு  வீரனின்  விழியிலும் ஒளி பற்றி ஏறுவதை காமிலரும் கணபாரரும்  உணர்ந்தனர். மோதமதியின்  புதல்வர்கள்  தவிர அங்கிருக்கும்  அத்தனை உடல்களும்  முறுக்கேறின. மார்பு  வரை  கருந்தாடி அலையடிக்க அடித்து வார்த்த நிமிர்ந்த நெஞ்சுடன் அருளும்  வெறியும்  வழியும்  விழிகளுடன் மேலாடை ஏதுமின்றி தேரை விட்டிறங்கி கணபாரரை நோக்கி வந்தான்  வன்தோளன்.

"ஆழிமாநாட்டின்  பெருவீரரை சவில்யத்தின்  ஒப்பற்ற தளபதியை வணங்குகிறேன்" என வன்தோளன்  கணபாரரின்  காலடியில்  முழு உடலும்  மண் தொட வணங்கி எழுந்தான். காமிலர்  உட்பட  அங்கிருந்த வீரர்கள்  அனைவரும்  எழுச்சி கொள்வது அவர்களின்  விழிகளில்  தெரிந்தது. தன்னை விட உயரமான  வன்தோளனை கணபாரர்  தோள் பற்றித் தூக்கி மார்புடன்  அணைத்துக்  கொண்டார். குனிந்த அவன் தலையில்  கை வைத்து "நீண்ட புகழுடன்  இரு மைந்தா" என வாழ்த்தினார். மோதமதியின்  புதல்வர்கள்  வன்தோளன்  தங்களருகே வருவான் என ஆவலுடன்  நோக்கி நின்றனர். யாரையும்  திரும்பி நோக்காது  அதே வலுவடிகளுடன் மீண்டும்  தேரில்  ஏறிக்கொண்டான்.

கணபாரர்  சுனதபாங்கத்தின்  அரண்மனையை அடைந்த போது எல்லைப் பூசல்கள்  பெருகியிருப்பது குறித்து தகவல்கள்  சவில்யத்தை எட்டியிருந்தன.

"கணபாரர்  சுனதபாங்கம் சென்றிருக்கும்  சமயம்  உகந்ததென்றே இந்நேரம்  பூசல்களை துவங்கி வைக்கின்றன அந்த முக்கூட்டு நாடுகள். நம்முடைய  சில கிராமங்களை இழக்க நேர்ந்தாலும் அது குறித்து  இப்போது பொருட்படுத்தக் கூடாது. கணபாரர்  திரும்பி வரும்  வரை சுனதபாங்கத்தின்  எப்படையையும் சவில்யம்  எதிர் கொள்ளப் போவதில்லை" என்று அவையில்  அறிவித்தாள் ஆதிரை.

சவில்யத்தின்  முக்கிய  வணிக தளங்கள்  முக்கூட்டு நாடுகளின் படைகளின் வசமாகிக் கொண்டிருந்தன. ஆதிரை திகைத்து  நின்றாள். மோதமதியின்  விழிகளில்  மீண்டும்  அரசியாகும் கனவு மின்னியது.

விகந்தரின் அவையில்  மீண்டும்  ஒரு பாணன்  பாட எழுந்தான். கணபாரரும்  விகந்தரும் பாடலில்  மகிழ்ந்திருக்க வன்தோளன் தலைமையில்  படை ஒருக்கங்கள்  நிகழ்ந்து கொண்டிருந்தன. ஆதிரை கணபாரருக்காக காத்திருக்கத் தொடங்கினாள்.

No comments:

Post a Comment